ஆஷுரா நோன்பின் சிறப்புகள்


ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிளந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும்.
அதற்கு நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்றார்கள். தன் தோழர்களையும் நோற்கும்படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
 
யூதர்களுக்கு மாறுசெய்வதற்காக ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.

ஆஷுரா நோன்பின் சிறப்புகள்:

1. ஆஷுரா நோன்பு பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, இந்த நாளை (ஆஷுரா தினத்தை) தவிர வேறு எந்த நாளிலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை. இந்த மாதத்தை (ரமளான் மாதம்) தவிர வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பாக தேடியதாக நான் அறியவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: ஆஷுரா நாள் நோன்பின் சிறப்பை தேடியது போன்று வேறு எந்த நாட்களின் நோன்பின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் தேடியதை நான் பார்க்கவில்லை என அப்துல்லாஹ் இப்னு அபீ யஸீது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் நான் கருதுகிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

3. ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீதில், முன் சென்ற வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக தவ்பா செய்வது அவசியமாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

ஆஷுரா நோன்பு நோற்பது பற்றி ஆர்வமூட்டும் ஹதீதுகள்:

1. நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்றார்கள். உங்களைவிட மூஸா(அலை) அவர்கள் விஷயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தேழார்களுக்கும்) ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில்: (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் நாங்களும் நோன்பு நோற்போம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு அறிவிப்பில்: அந்த நாளை கண்ணியப்படுத்துவதற்காக நாம் நோன்பு நோற்போம் என்றார்கள்.

2. நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தின் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி யார் நோன்பாளியாக காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பை தொடரட்டும், யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் இன்றைய தினத்தின் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும் என அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன்பின் நோன்பு வைக்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். இன்னும் நாங்கள் பள்ளிக்கும் செல்வோம், கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம். அவர்களில் யாரும் அழுதால் நோன்பு திறக்கும் வரை அந்த விளையாட்டுப் பொருளை அவர்களுக்காக கொடுப்போம். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்: அவர்கள் எங்களிடம் உணவு கேட்டால் அவர்களின் நோன்பை முழுமைபடுத்தும் வரை அவர்களின் பசியை போக்கும் அளவிற்கு அவர்களுக்கு அந்த விளையாட்டுப் பொருளை கொடுப்போம் என்று வந்திருக்கின்றது.

3. அஸ்லம் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு நபி(ஸல்) அவர்கள் (பின்வரும் அறிவிப்பை) மக்ககளுக்கு அறிவிக்கும்படி கூறினார்கள், யாராவது உணவு சாப்பிட்டிருந்தால் மீதியுள்ள நேரத்தை உண்ணாமல் இருக்கட்டும். யாராவது (இதுவரை) உண்ணவில்லையானால் அவர் நோன்பை நோற்கட்டும் காரணம் இன்றைய தினம் ஆஷுரா தினமாகும். (புகாரி, முஸ்லிம்)

4. ஆஷுரா தினம் யூதர்கள் கண்ணியப்படுத்தும் தினமாகவும் பெருநாளாக கொண்டாடும் தினமாகவும் இருந்தது, ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிமின் இன்னும் ஒரு அறிவிப்பில்: கைபர் வாசிகள் (யூதர்கள்) ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள், அதை பெருநாள் தினமாகவும் கொண்டாடுவார்கள். அவர்களின் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அணிவிப்பார்கள். ஆகவே! நீங்கள் அந்த நாளில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ரமளான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு பற்றிய நிலை:

1. ரமளான் (நோன்பிற்கு) முன் ஆஷுரா நோன்பு (அவசியமாக) நோற்கப்படக்கூடிய ஒன்றாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள். விரும்பியவர்கள் அதை விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. ஜாஹிலிய்யா காலத்து மக்கள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் அதை நோற்றார்கள் விரும்பியவர்கள் அதை விட்டார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)

3. ஜாஹிலிய்யா காலத்து மக்கள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமளானுடைய நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் அதை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆஷுரா தினம் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும், விரும்பியவர் அதை நோற்கட்டும் விரும்பியவர் அதை விடட்டும் என்றார்கள். (முஸ்லிம்)

4. ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் குறைஷிகள் ஆஷுரா நோன்பை நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள், அன்றைய தினம் கஃபாவிற்கு திரையிடப்படும் தினமாக இருந்தது. (புகாரி)

5. இது ஆஷுரா தினமாகும், உங்களுக்கு அல்லாஹ் அந்த நோன்பை கடமையாக்கவில்லை, நான் நோன்பு நோற்றிருக்கின்றேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும் விரும்பியவர் நோன்பை விடட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என முஆவியா(ரலி) அவர்கள் கூறிய செய்தியை ஹுமைத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

6. ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பை நாங்கள் நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏவவுமில்லை தடுக்கவுமில்லை நாங்கள் அதை நோற்றுக் கொண்டிருந்தோம் என கைஸ் இப்னு ஸஃது இப்னு உபாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)

குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து விளங்கக்கிடைக்கும் விஷயம், ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பு நோற்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் அவசியம் என்பதுதான் எடுபட்டதே தவிர அது நோற்பது சுன்னா என்பது எடுபடவில்லை, நபி(ஸல்) அவர்கள் ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டார்கள் என்பதின் கருத்து, அது அவசியம் என்பதைத் தவிர அது சுன்னத்து என்பதையல்ல. அது இன்னமும் தரிபட்டதாக இருக்கின்றது என இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் பத்ஹுல்பாரி என்னும் தனது நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
1. அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)

2. ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

3. ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)
வரிசை எண் 3-ஆம் ஹதீது மேற்கூறப்பட்ட கிரந்தங்களிலும் இன்னும் பல கிரந்தங்களிலும் பதியப்பட்டிருந்தாலும் இந்த ஹதீது பலவீனமானதாகும். இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான என்பவர் இடம் பெற்றிருக்கின்றார் இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன் அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இன்னும் தாவூத் இப்னு அலி என்பவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்றார் அவரை தஹபி இமாம் அவர்கள் இவருடைய ஹதீதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறுகின்றார்கள்.

ஆகவே ஆதாரப்பூர்வமான ”எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்” என்ற ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே சிறந்த முறையாகும். அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.

முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது மாத்திரமே நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையாகும்.

அதையே முன்சென்ற நபிமொழிகளில் பார்த்தோம். இதை தவிர்த்து அன்றைய தினத்தில் விஷேச வணக்கங்கள் புரிவது மற்றும் உணவுப்பண்டங்கள் செய்து ஏழைகளுக்கு தர்மமாக கொடுப்பது பள்ளிவாசல்களுக்கு அனுப்புவது போன்ற காரியங்கள் அனைத்தும் பித்அத்தாகும். அதே போன்று ஷீஆக்கள் அன்றைய தினத்தை துக்க தினமாக கொண்டாடுவதும் பித்அத்தாகும். இவைகள் அனைத்தையும் தவிர்த்து நபிவழி பேணுவோமாக!

நபிகள் நாயகத்தின் ‘அரஃபா’ பேருரையும் உரிமைகள் பிரகடனமும்



முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப்பரம்ரையில் ஆமினா என்ற பெண்ணுக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தை அப்துல்லாஹ்வையும், பிறந்து சில மாதங்களில் தனது தாய் ஆமினாவையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள்.


பொதுவாக அநாதையாக வாழும் குழந்தைகளுக்கு சிறுவர் துஷ்பிரயோகங்கள், மற்றும் சீரில்லாத நடத்தைகளுக்கு ஆட்படுவதுண்டு. ஆனால் முஹம்மத் நபி அவர்கள் அவ்வாறான எவ்வித தீய நடத்தைகளையும் சந்திக்கவுமில்லை. அரங்கேற்றவுமில்லை. மக்காவில் வாழ்ந்த மக்கள் அவர்களை நற்பண்புள்ளவர், நம்பிக்கையாளர், உண்மையாளர் என அழைத்ததன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் பிறந்த காலத்தில் மக்கள் கடவுளின் நேரடியான வழிகாட்டல்களை விட்டும் திசைதிரும்பிய மிருகங்களாக வாழ்ந்து வந்தனர், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை வெறுத்தனர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெற, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீய பண்புகளால் மனிதர்களை அடிமையாக்கி வாழ்ந்தனர்.

விடிவைத்தேடியும், நிம்மதியைத்தேடியும் மக்கள் அலைந்திரியும் இந்த கால கட்டத்தில்தான் முஹம்மத் நபி அவர்கள் ஏக இறைவனின் தூதராக வந்து அம்மக்களுக்குப் போதனை செய்தார்கள். மக்கா என்ற ஊரில் இருந்து கருத்துரிமை பறிக்கப்பட்ட இவர்கள் மதீனா என்ற நகரைத் தேர்வு செய்து அங்கு இஸ்லாமிய அரசையும் நிறுவினார்கள்.

நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சாதி, நிற, கோத்திர வேறூடற்ற சமூகமாகவும், சகோதரர்களாகவும் அவர்களை மாற்றினார்கள். ஆரம்பத்தில் அவர்களை எதிர்த்த மக்களின் பல்லாயிரக் கணக்கானோர் பிற்காலத்தில் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று முஹம்மத் நபியுடன் இணைந்தார்கள்.

மதீனாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்த முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையை மதீனா சென்ற பத்தாவது வருடம் துல்ஹஜ் என்ற மாதத்தில் நிறைவேற்றப்போவதாக அறிவிப்பு விடுத்தார்கள்.

பல்லாயிரக்கணக்கனானோர் அதில் கலந்து கொள்ள மதீனா வந்தனர். அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மக்கா வந்து அங்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்த பின்னர் மக்காவில் இருந்து கிட்டத்தட்ட 16 கி. மீட்டர்களுக்கு அப்பால் உள்ள அரஃபா என்ற முற்றவெளியில் ஒரு பள்ளத்தாக்கருகில் துல்ஹஜ் பிறை ஒன்பதில் அவர்களை ஒன்றிணைத்து ஒரு பேருரையும் நிகழ்த்தினார்கள். அதில் மனித உரிமை, கொலையாளிகளை மன்னித்தல், வட்டித்தொழிலுக்குத் தடை விதிப்பு, நிற, கோத்திர, குலப்பேதங்களுக்கு முடிவு போன்ற பல அம்சங்கள் உள்ளடங்கி இருந்தன. அவை பற்றி இங்கு சுருக்கமாகக் கவனிப்போம்.

1- மற்றவர் மானம், மரியாதை, சொத்துக்கள் புனிதமானவை

மக்களே அறிந்து கொள்ளுங்கள்! இந்த தினம் எவ்வளவு புனிதமாதோ, இந்த இந்தப் பிரதேசம் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று உங்களது இரத்தங்களும், உங்களது செல்வங்களும் மற்றவர் மீது -ஹராம்- முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை நபித்தோழர்களுக்கு அன்றுதான் போதித்தார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாற்றமாக இருபத்தி மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் இது பற்றி எச்சரித்திருக்கின்றார்கள்.

ஹுதைபியாவில் ஒரு நிகழ்வு:
 
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபியா என்ற இடத்தில் நபிகள் நாயகம் அவர்களுக்கும், மக்கா இறை நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் ஓர் சமரச நிகழ்வு கையெழுத்தானது. உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபி என்பவர் (இஸ்லாத்தைப் பின்புகு ஏற்றவர்) மக்காவாசிகள் சார்பாக கலந்து கொண்டார். அவர் சமரச நிகழ்வின் இடையில் பாசமாக நபிகள் நாயகத்தின் முகத்தை தடவ தனது கையைக் கொண்டு சென்றார். முகீரா பின் ஷுஃபா என்ற நபித்தோழர் இவரது கையை ஒரு முறைக்குப் பலமுறை தட்டிவிடுகின்றார். இதை அவதானித்த அவர், யார் இவர் ? எனக் கேட்டபோது , (இவரைத்தெரியாதா) இவர்தான் உங்கள் சகோதரரின் மகன் முகீரா என்று கூறப்பட்டது. உடனே அவர்! ஏ! மோசடிக்காரனே! உனது மோசடி விஷயமாக நான் பல தடவைகள் முயற்சி செய்து பலனற்றுப் போனது உனக்கு நினைவில்லையோ எனக் கூறினார். இந்த முகீரா என்பவர் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்னால் ஜாஹிலிய்ய மக்களுடன் பயணம் சென்று, அவர்களின் பணங்களைத் திருடிக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்திருந்தார். இஸ்லாத்தை நான் அங்கீகரிக்கின்றேன், ஆனால் அந்த பொருள் தொடர்பானதற்கு நான் பொறுப்பல்ல என நபி (ஸல்) அவர்கள் அழுத்தமாகக் கூறினார்கள். (புகாரி).

பிறிதொரு சந்தர்ப்பத்தில் தனது தோழர்களிடம் உங்களில் யாராவது மற்ற சகோதரனுக்கு மானம், மற்றும் அதுவல்லாத எதிலாவது அநீதி இழைத்திருப்பின் அதிலிந்து இவ்வுலகியே நிரபராதியாகிக் கொள்ளுங்கள். மரணத்தின் பின் வரும் அந்நாளில் தீர்ப்பளிக்கப்படுகின்ற போது உங்களிடம் உள்ள தங்கம், வெள்ளிக் காசுகளைக் கொடுத்து விடுதலை பெறமுடியாது எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இஸ்லாமில் ஒரு முஸ்லிம் மனிதர்களுக்கும், பிற படைப்பினங்களுக்கும் அநீதி செய்வது முழுமையாக் தடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின் அடிப்படையில் நடப்பவர்கள் உண்மை முஸ்லிம்கள். இவ்வளவு பெரிய அறிவுரையை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நபிகள் நாயகம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் தனது இருபத்தி மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் பத்தொன்பது போர்கள் புரிந்தார்கள். அதில் 1220 பேர் வரைதான் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கின்றது. ஆனால் 1990ல் ஈராக் மீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் மாத்திரம் 500,000. (ஐந்து இலட்சம்) குழந்தைகள் மரணித்தார்கள்.

2003ல் உலக நாடுகளின் காதுகளில் பூச்சுற்றிய அமெரிக்காவின் ஆக்கிரிமிப்பால் 17 இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்கள் மாண்டிருக்கின்றார்கள். நாள்தோரும் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது. நூற்றுக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்படுகின்றனர். இப்படியான செயற்பாடுகளை நபிகள் நாயகம் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
ஒரு போர் களத்தில் கற்பமான ஒரு பெண்ணை ஒருவர் அடிமையாக சிறைப்பிடித்து தனது கூடாரத்தினுள் கட்டிவைத்திருந்தார். இவரது நோக்கம் இந்தப் பெண்ணுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக இருந்தது. இதனை அவதானித்த நபிகள் நாயகம் அவர்கள் என்ன இவர் இந்தப் பெண்ணுடன் உடலு உறவில் ஈடுபட நாடி இருக்கின்றார் போலும் என அங்குள்ள மக்களிடம் கேட்டார்கள். அவர்கள் ஆம் ! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். எனக்கு அறிந்துதான் இதைக் கேட்டேன். இவர் இந்தப் பெண்ணுடன் நடந்து தனது வாரிசல்லாத ஒருவரை தனக்குரிய வாரிசு எனக் கூறப்போகின்றாரா? அல்லது மற்றவன் வாரிசை தனதாக்கிக் கொள்ளப்போகின்றாரா? என உரத்த குரலில் பேசி விட்டு, இவர் அவ்வாறு நடந்திப்பின் நான் சாபத்தைச் செய்திருப்பேன்; அது அவரை மண்ணறைக்குக் கொண்டு சென்றிருக்கும் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).

ஜனநாயகம், முதலாளித்துவம் என்றெல்லாம் வாய்கிளியப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கப்படைகள் ஈராக்கிலுள்ள அபூகிரைப் சிறைக்கைதிகளுடன், குவாண்டனாமோவிலுள்ள கைதிகளுடன், ஆப்கானில் பாக்ராமிலுள்ள கைதிகளுடன் நடந்து கொள்ளும் முறை பற்றி உலகம் காறித்துப்பியது. நடுநிலையான மீடியாக்களும், நாளேடுகளும் பக்கம் பக்கமாக வெளிச்சம் போட்டுக்காட்டின. இவ்வளவும் மற்றநாடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக வீணாக ஓட்டப்பட்ட இரத்தங்களாகும் என்பதை உலகுக்குத் தெரியும் என்பதை அமெரிக்கர்கள் தெரிந்து கொண்டே இந்தக் கொள்ளையிலும், கொலையிலும் தம்மை வெட்கமின்றி ஈடுபடுத்திக் கொண்டனர்.

2- குல, கோத்திர, நிற, சாதிவேறுபாடு, அல்லாஹ்வுக்கு தரகர் ஏற்படுத்துதல் போன்ற அறியாமைக்கால அனைத்து பண்பாடுகளும் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டு விட்டதை அறிவித்தமை.

நிரம், கோத்திரம், சாதி வேறுபாடுகளுடன், மனிதர்களை அடிமையாக்குதல், மற்றவர்களின் உரிமைகளைப் பறித்தல், வீட்டோ பவர் நடைமுறையை ஒத்த நடைமுறை, மற்றவர்களைக் கேவலமாக நினைத்தல், அல்லாஹ்வுக்கு இடைத்தரகர்களை உண்டு பண்ணி அவனது கண்ணியத்தைக் குறைத்தல் போன்ற தரம் கெட்ட வேலைகள் ஜாஹிலிய்யப் பண்பாடு என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாறான அனைத்து விதமாகன பழக்கங்களும் புதை குழிக்கு அனுப்பப்படுவதாகக் கூறினார்கள்.

ஒரு தாய் மக்கள் நாமென்போம் என்ற உண்மையினை 1500 ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணல் நபி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. நீங்கள் ஒவ்வொரும் ஆதாமின் பிள்ளைகள், ஆதாம் மண்ணில் இருந்து படைக்கப்பட்டார்,

அபீஸீனியக் கருப்பு அடிமையான பிலால் (ரழி) அவர்கள் அதான் எனப்படும் தொழுகை அழைப்பிற்கு தலைமை முஅத்தினாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இஸ்லாமல்லாத மதத்தில் பல சாதிகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரது கோயிலுக்குக் கூட செல்லமுடியாத நிலை. இந்தியாவில் தலித்துக்கள் என்ற பிரிவினர் தீண்டத்தகாதர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் கிரிஸ்தவ மதத்திற்கோ, அல்லது புத்த மதத்திற்கோ சென்றாலும் அவர்களின் சாதி ஒழிவதில்லை. நேற்றுவரை முடிவெட்டிக் கொண்டிருந்த ஒருவன் இஸ்லாத்தின் இணைந்த மறு நிமிடமே முஸ்லிம் செல்வந்தரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து ஒன்றரக்கலந்து உறவாடுகின்றான்.

நிற, கோத்திர, தேசிய வெறிகளும், வாதங்களும் இஸ்லாத்தில் இருந்து ஓரம் கட்டப்பட்டவையாகும். உலகுக்கு நாகரீகத்தைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறும் அமெரிக்காவில் இருக்கும் வெள்ளை மாளிகை என்ற பெயர் கருப்பின மக்களுக்கு எதிராக சூடப்பட்டதாகும் என்பதாக மால்கம் எக்ஸ் என்ற அறிஞர் பற்றிய ஆய்வின் குலாம் முகம்மத் என்ற எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். கிரிஸ்தவர்கள் மத்தியில் புரொடெஸ்டான்ட், கத்தலிக் என்ற இரு வர்க்க முரண்பாட்டடினால் பல ஆண்டுகள் சண்டை நடைபெற்றதாக வரலாறு சொல்கின்றது.

3- தனது குடும்பக் கொலையாளிகளை முதலாவதாக மன்னித்ததாக அறிவித்தமை.

நபிகள் நாயகத்தின் அரஃபாத்தின பேருரையில் உரையில் உள்ளடங்கி இருந்து அம்சங்களில் கொலை குற்றம் புரிந்தோரை மன்னித்ததாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அறிவித்ததும் ஒன்றாகும். இதை சம்பிரதாய அறிவிப்பாகவோ, அல்லது பிறரின் குற்றவாளிகளை மன்னித்தாகவோ விளங்கிக் கொள்ளக் கூடாது.

மாற்றமாக தனது உறவினர்களில் ஒருவரைக் கொலை செய்தமைக்கான மன்னிப்பாகும். இயாஸ் பின் ரபீஆ என்பவர் சிறு வயதில் பனூஸஃத் கோத்திரத்தில் செவிலித்தாய் மூலம் பால்குடித்து வாழ்ந்து கொண்டிருந்த போது ஹுஸைல் என்ற கோத்திரத்தினர் இவரைக் கொலை செய்து விடுகின்றனர். இதற்கு குழுமக் கொலை என்று சொல்வார்கள். இவருக்காக அந்தக் கோத்திரத்தினர் நபிகள் நாயகத்தின் கை ஓங்கி இருப்பதால் நாம் கொலை செய்யப்படுவோம் என்ற பீதியில் வாழ்ந்து வந்தனர். பலிக்குப்பலி தீர்ப்பு தொடர்பில் நமது இரத்தம் தொடர்பானதை முதலவதாக தாம் மன்னித்ததாக நபி நாயகம் அவர்கள் அறிவிப்புச் செய்தததை எவ்வளவு பெரிய மனித நேயப் பண்பாடு என்று சிந்தியுங்கள்.

குஜ்ராத் முஸ்லிம்களை தீயிலிட்டுக் கொழுத்தி, பெண்களின் கற்புகளைச் சூரையாடி இந்து வெறியர்களை அதன் பின்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டவர்களை முஸ்லிம்கள் மனித நேயத்துடன் நடத்தவில்லையா?
இன்று, ஒரு முஸ்லிம் நாடு மற்றொரு நாட்டையோ, அல்லது ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் சக சமுதாயத்தவரையோ ஆக்கிரிமிதட்ததாகவோ, குண்டுவைத்துக் கொண்டார்கள் என்றோ ஒரு ஆதாரம் கூட இல்லாத நிலையிலும் உலகில் கருணையையும், அன்பையும் போதித்த நபிகள் நாயகத்தையும், அவரைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் மீடியாக்கள் போட்டி போட்டுக்கொள்கின்றன.
மாவோஸ்டிகள், நக்ஸலைட்டுகள், குஜ்ராத் குண்டர்கள், புலிப்பயங்கரவாதிகள் பற்றி மௌனமாக இருக்கும் பத்திரிக்கைகள் முஸ்லிம்களை எப்படி சீண்டுகின்றார்கள் என்று பாருங்கள்.

4- வட்டி என்ற வன்கொடுமை ஒழிப்புப் பிரகடனம்.

மனிதனை கெளரவமாக ஏமாற்றும் யூதத் தொழில்தான் வட்டி, வட்டித்தொழிலை உலகில் ஆரம்பித்தவர்கள் யூதர்களே! ஏழை மனிதர்களின் உதிரங்களை உரிஞ்சி, அவர்களைக் கசைந்து பிழியும் பாதுகாப்புடன் நடந்தேறும் மிகப் பெரும் கொள்ளை. இந்தக் கொள்ளையால் எத்துணை தற்கொலைகள், எத்துணை குடும்பத்தகராறுகள், எத்துணை சமூகக் கொடுமைகள் நாளாந்தம் அரங்கேறுகின்றன என்பதை நாம் அறிவோம்.
இதையும் மண்ணோடு புதைக்கப்படுகின்றது என அறிவித்து தனது சிறிய தந்தையர்களில் ஒருவரான அப்பாஸ் என்பவர் கொடுத்த வட்டியைத் தள்ளுபடி செய்வதாக தனது குடும்பத்தில் இருந்தே ஆரம்பம் செய்தார்கள்.
இந்தியாவில் வருடந்தோறும் விவசாசிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர், காரணம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை என்கின்றனர், ஒன்றோ குலம், ஒருவனே தேவன் என வாயளவிலும், ஏட்டளவிலும் கோட்பாடுகள் புதைந்து போய் இருப்பதும், ஒருவனுக்குச் செய்கின்ற பண உதவிக்காக பல ரூபாய்களை கொள்ளை அடிப்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

வட்டித் தொழில் அல்லாஹ்வோடும், அவனது தூதரோடும் போராடுவதற்குச் சமமான பெரும் பாவங்களில் ஒன்று என இஸ்லாம் ஆணித்தராமகக் கூறுவதுடன் வட்டி என்றோ ஒரு நாள் அழிக்கப்படும், தர்மம் உயிர் வாழும், கடனாளியை மன்னிப்பதால் மறுமையில் அல்லாஹ்வின் நிழலின் கீழ் கௌரவம். கடனாளி திருப்பித் தரமுடியாமல் இருப்பின் காலக்கெடு வழங்குதல், ஈ அல்லது அரைவாசியை மன்னித்து, மீதியைப் பெறுதல் போன்ற மனிதர்களுக்கு ஏதுவான பல நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வட்டி என்றோ ஒரு நாள் நஷ்டத்தைத் தழுவும் என்பதை அமெரிக்காவில் இந்த வருடத்தில் மாத்திரம் 123 வட்டி வங்கிகள் மூடப்பட்டிருப்பதும், வட்டி வங்கிகளின் ஒரு அங்கமாக அமைக்கப்படுவதும், இஸ்லாமியப் பொருளாதார முறை பற்றி அடிக்கடி பேசப்படுவதும் வட்டியின் தாக்கங்களில் உள்ளவையாகும்.

5- பெண்களின் உரிமைகளைப் பேணுமாறு உரைத்தமை.

நபிகள் நாயகம் அவர்கள் அரஃபா தினப் பேருரையில் : பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அமானிதமாகக் கைப்பிடித்துள்ளீர்கள், அவர்களின் மர்மஸ்தானங்களை அல்லாஹ்வின் வார்த்தை மூலம் ஆகுமாக்கிக் கொண்டீர்கள், நீங்கள் நியாயமான முறையில் அவர்களுக்கு ஆடைய வாங்கிக் கொடுப்பதும், உண்ணக் கொடுப்பதும் உங்கள் மீதுள்ள கடமையாகும். நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் வீடுகளில் நுழைவிப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல, உங்களை மீறி செயல்பட்டால் காயம் ஏற்படாதவாறு அவர்களை நீங்கள் அடியுங்கள் எனப் பிரஸ்தாபித்தார்கள்.

ஆண்கள் பெண்களை நடாத்தும் முறை, அவர்கள் மீது கணவன்மாருக்குரிய கடமைகள், மனைவியர் கணவன் விஷயத்தில் நடந்து கொள்ளும் முறை பற்றி மேலும் பல வழிமுறைகள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரு குடும்பத்தின் சுபீட்சமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

நவீன பெண்ணியம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அது இஸ்லாத்தின் எதிரிகளின் மிகப்பெரிய ஆயுதம். இஸ்லாமியப் பெண்ணியம் என்ற புதிய சொற்றடர் அமெரிக்காவில் பரவலாக பேசப்படுகின்றது.
பெண்களைப் பாவிகளாக, உயிரற்ற சடங்களாக மதிக்கின்ற மதநூல்களைப்படித்துவிட்டு இஸ்லாத்திலும் இப்படித்தான் இருக்கும் என்ற தப்பெண்ணத்தில், இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை, அடிமைகள் போல நடத்தப்படுகின்றார்கள் என்றெல்லாம் தப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். அதனால் இஸ்லாமியப் பெண்ணியம் பற்றி அடிக்கடி அலட்டிக் கொள்கின்றனர். அதனால் என்ன விரும்புகின்றார்கள்.! பெண்களின் விடுதலையா என்றால் ஆம், ஆனால் பின்வருமாறு.
  • முறையற்ற திருமண முறை. இதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் ‘ஒற்றைப் பெற்றோர் முறை’ என்கிறார்கள். (Single parenthood).
  • கருப்பைச் சுதந்திரம். (கண்டவனுடன் படுத்து உறங்கும் உரிமை, பெண்களை பெண்கள் திருமணம் செய்யும் உரிமை)
  • பெண் தான் விரும்பும் இடம் செல்ல அனுமதித்தல்
  • அன்னிய ஆடவர் ஒருவனுடன் தனிமையில் இருந்து சல்லாபம் செய்தல்,
  • மதம், மொழிகளுக்கு அப்பால் நின்று கணவனைத் தெரிவு செய்தல் போன்ற பெண்ணின் கௌரவத்தைக் குறைத்து நடுவீதியில் சீரழிய வைக்கும் நாகரிகம்.
பெண்ணுரிமைப் பற்றி பேசுவோர் பெண்களை மதித்த விதம் தெரியுமா?
  • ஆதாமைக் கெடுத்தது ஏவாள். (பைபிள்)
  • பெண் தீமைகளின் ஊற்றுக்கண். (கிரேக்கர்களின் ஆரம்ப கால நம்பிக்கை)
  • பெண்களுக்கு ஆண்மா உண்டா ? இல்லையா ? என்ற கட்டயப் பஞ்சாயத்து.
  • ஹிஜாப் அணியும் பெண்ணுக்கு அபராதம் விதிக்கும் ஃபிரான்ஸில் 1939 வருடம் வரை ஒரு பெண் விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். கணவனே அதைச் செய்ய முழு உரிமையுடைவன், அதில் கணவனின் உத்தரவின்றி எவ்வித கையாடலும் செய்யமுடியாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. பின்பு ஆணாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் சில நிபந்தனைகளுடன் அது மாற்றமடைந்தது.
  • ஒரு பெண் சொத்துக்களை தனக்கென வைத்திருக்க முடியாது என்ற நடைமுறை ஜேர்மனியில் 1959 வருடம் வரை நிலவியது. மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சம்பள முறையே அங்கும் பின்பற்றப்படுகின்றது. அதாவது: ஒரு பெண்ணிண் ஊதியம் ஒரு ஆணின் ஓதியத்தின் அரைவாசி என்ற நடை முறை. பிரட்டனில் இன்றும் ஆண்களுக்கு சரிசமமான பதவிகளில் இருக்கும் 75 வீதம் பேர் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட அரைவாசியாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • இந்தியாவில் உயர்ஜாதியினரின் நாய்க்கு உணவு கொடுத்த தலித் பெண்ணுக்கு ரூபா பதினைந்தாயிரம் அபராதம். நாயும் அவள் வீட்டில் விடப்பட்டது என்ற அசிங்கமான நடைமுறை, இது இவ்வாண்டின் ஹாட் நிவ்ஸ்.
உனது மனைவியின் வாயில் நீ ஊட்டி விடுகின்ற ஒரு கவள உணவும் தர்மமே! போதனை செய்கின்ற மார்க்கம் இஸ்லாம். தலாக் என்ற விவாகரத்து செய்யப்படும் பெண் அவளது விவாகம் ரத்தாகியதா? இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிப்பதற்கு முன்னால் அவள் தனது கணவனின் பொறுப்பில், அவனது செலவில் பராமரிக்கப்பட வேண்டும், அவனே குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும் என்றும் கூறும் இந்த அற்புதமான மார்க்கத்தில் பெண்களுக்கு எப்படி எல்லாம் உரிமைகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.

அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவதை அஞ்சியமை

இதுவும் நபிகள் நாயகத்தின் உரையில் இறுதியாக உள்ளடங்கி இருந்த அம்சமாகும். இப்படியாதொரு நடைமுறை உலகில் எந்தத் தலைவரிடமும் காணமுடியாதாகும். என்ன சொன்னார்கள் என்பதைக் கவனியுங்கள்!
நான் இவ்வாண்டின் பின் உங்களை சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. மறுமையில் அல்லாஹ் உங்களிடம் என்னைப் பற்றிக் கேட்பான், நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உங்கள் பணியை சரியாகவும், நிரப்பமாகவும் செய்தீர்கள் என்று அல்லாஹ்விடம் நாம் சாட்சி கூறுவோம் எனக் கூறினார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், வானின் பக்கமாக தனது ஆட்காட்டி விரலை அசைத்து, பின்பு அதை மக்கள் பக்கம் காட்டடியவர்களாக அல்லாஹ்வே! நீயே சாட்சியாக இரு! நீயே சாட்சியாக இரு! நீயே சாட்சியாக இரு! மூன்று தடவைகள் அல்லாஹ்வை வேண்டி விடை பெற்றார்கள்.

கடவுள் எங்கே இருக்கிறார்?



நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா.."

"சாத்தா‎ன் நல்லவரா?"

"‏இல்லை."

"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"

"கடவுளிடமிருந்துதா‎ன்."

"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"

"ஆம்."

"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"

......

"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"

.......

"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"

"ஆம் ஐயா.."

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"

"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார். 

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"

"நிச்சயமாக உள்ளது."

"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"

"நிச்சயமாக."

"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது." 

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"

"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."

"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"

"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"

"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."

"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"

"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள். 

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�
�். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏ 

"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?"

"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.

"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"

(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"

(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"

"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று." 

"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏




Read in ENGLISH

ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!

ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.


ஹஜ் கடமை:- மக்காவுக்குச் சென்று இந்தக் கடமையைச் செய்யத் தக்க பொருள் வளமும், உடல் நலமும் உள்ளவர்கள் மீது கட்டாயமானதாகும். எனவே உலக நாடுகளிலிருந்து இலட்சோப இலட்சம் சக்திபடைத்த முஸ்லிம்கள் சமத்துவமாக, சகோதரத்துவமாக தியாகத்துடன் ஹஜ் கடமைக்காக மக்காவில் அணி திரள்கின்றனர்.

தியாகம்:- இந்த ஹஜ் கடமை அதைச் செய்வோரிடம் தியாகத்தை எதிர்பார்க்கின்றது. இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி, அன்னை ஹாஜறா ஆகியோரது தியாகத்தை நினைவூட்டும் பல அம்சங்கள் ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாளாகத்தான் கொண்டாடப்படுகின்றது. எனவே இந்த ஹஜ் கடமையைச் செய்யும் ஹாஜிகள் தம்மிடம் தியாகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் செல்வந்தர்களிடம் சமுதாய விழிப்புணர்வு எனும் தாகத்துடன் கூடிய தியாகச் சிந்தனை ஏற்பட்டால் சமுதாயத்தில் நல்ல பல மாற்றங்களைக் காணலாம்.

கொள்கை உறுதி:- இப்றாஹீம், இஸ்மாயில், அன்னை ஹாஜறா ஆகியோரது கொள்கை உறுதியைப் பறைசாட்டும் நிகழ்வாகவும் ஹஜ் திகழ்கின்றது. அல்லாஹ் அறுக்கச் சொன்னதும் மகன் என்று பாராமல் தந்தை அறுக்கத் துணிகின்றார். மகனும் எந்த மறுப்போ, தயக்கமோ இன்றி அந்தக் கட்டளைக்குப் பணிகின்றார். அல்லாஹ் சொன்னதைச் செய்வது என்பதிலும், அதில் சுய விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதிலும் எத்தகைய கொள்கை உறுதியுடன் இந்தக் கோமான்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஹஜ் செய்யும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் இந்தக் கொள்கை உறுதியைத் தம் மனதில் ஆழமாய்ப் பதித்துக்கொள்ள வேண்டும். எமது சமூகத்தில் உள்ள எத்தனையோ பணம் படைத்தவர்கள் தமது செல்வத்தை அநாகரிக அரசியலுக்காகவும், ஆபாசம் நிறைந்த “கலை-கலசாரம்” என்ற பெயரில் நடக்கும் கலாசாரக் கொலை நிகழ்ச்சிகளுக்கும் வாரி வழங்குவதைப் பார்க்கின்றோம். குர்ஆன்-ஸுன்னாவுக்கு எந்நிலையிலும் கட்டுப்படுவேன். அதற்கு மாற்றமான நடவடிக்கைகளுக்கு எக்காரணம் கொண்டும் உதவ மாட்டேன் என்ற உறுதி எமது செல்வந்தர்களிடம் உருவாக வேண்டும்.

இரக்கம் பிறக்கட்டும்:- “ஹஜ்” என்பது மனிதனிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவேதான் அம்மாதங்களில் யார் தன் மீது ஹஜ்ஜை விதியாக்கிக் கொண்டாரோ அவர் ஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்! பாவச் செயல்களில் ஈடுபட வேண்டாம்! தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம் எனக் குர்ஆன் கூறுகின்றது.

சமூகத்தில் பெரும் பெரும் குற்றச் செயல்களை சமூக அந்தஸ்த்து மிக்கவர்கள் துணிவுடன் செய்கின்றனர். பணம் இருக்கிறது என்ற திமிரில் அடுத்தவர்களை ஆள் வைத்து அடிப்பது, சட்டத்தையும் அரசியல் பலத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பலவீனமானவர்களைப் பழி தீர்ப்பது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபடுவோர் அதிகம் உள்ளனர்.

ஹஜ் செல்வந்தர்களின் இதயத்தில் இரக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தம்மை விடக் கீழானவர்கள் மீது அன்பையும், கருணையையும் பொழியும் நல்ல உள்ளங்களை உருவாக்க வேண்டும்.

ஈகை மலரட்டும்:- ஹஜ் பெருநாளை “ஈகைத் திருநாள்” என்று கூறுகின்றோம். இப்றாஹீம் நபி தனது மகனை அறுக்கத் துணிந்ததை நினைவூட்டும் முகமாகக் கால்நடைகளை அறுத்து வறியவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த ஈகைக் குணம் ஹஜ்ஜாஜிகளிடம் ஏற்பட வேண்டும். தமக்கு அல்லாஹ் வழங்கிய அருளில் வறியவர்களையும் பங்குகொள்ளச் செய்யும் பக்குவம் பிறக்க வேண்டும்.

உள்ளத்தின் கண்கள் திறக்கட்டும்:- முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் பல. முஸ்லிம் சமூகத்தின் நலிவடைந்த நிலை இஸ்லாத்தையும், முஸ்லிம் உம்மத்தையும் தப்பும் தவறுமாகப் பிற மக்கள் கணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த சமுதாயத்தின் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது. சமூகத்தின் பண்பாடுகளும், பழக்க-வழக்கங்களும் மாறிக்கொண்டு செல்கின்றது. வறுமை சமூகத்தை வாட்டி வதைக்கின்றது. பாரிய பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள அடி மட்ட மக்களின் தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. விதவைகள், அநாதைகள் மற்றும் ஏழைகளின் நடத்தைகளில் வறுமை பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. போதைக்கும், ஆபாச சினிமாவுக்கும் அடிமைப்பட்ட இளம் சமூகம் உருவாகி வருகின்றது. ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால் முஸ்லிம் உம்மத்தின் அத்திவாரங்கள் ஆட்டங்கண்டு வருகின்றன; ஆணிவேர்கள் அரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையை நீக்கப் பாரிய சமூகப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

குர்ஆன்-ஸுன்னா எனும் சத்தியப் பிரசாரம் சமூகத்தின் அடி மட்டம் முதல் அழுத்தமாகப் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.

கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுக் கல்வி விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். கல்விக்குத் தடையாக உள்ள கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும். கற்கும் ஆற்றலும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களின் கல்விக்குத் தடையாக இருக்கும் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்.

விதவைகள், அநாதைகள் போன்ற பலவீனமானவர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தச் சமய-சமூக மாற்றத்திற்கும் நல்ல மனம் கொண்ட செல்வந்தர்களின் பணம் அர்ப்பணமாக வேண்டும். பணம் படைத்தவர்கள் தமது உள்ளத்தால் சமூகத்தைப் பார்க்க வேண்டும். உள்ளத்தின் கண்கள் திறந்தால் சமூகத்தின் அவலநிலை அவர்களுக்குப் புரியும். அதை நீக்க வேண்டும் என்ற ஏக்கமும் அவர்கள் இதயத்தில் பிறக்கும்.

இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்:- இல்லாதவன் தன் வறுமையிலும் பொறுமையைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி வாழ வேண்டும். “இருப்பவன் இல்லாதவனுக்குப் “பொறுமையுடன் வாழ வேண்டும்!” என்று புத்தி சொன்னால் மட்டும் போதாது. இருப்பதில் கொஞ்சம் கொடுத்துப் பொறுமை பற்றியும் கூற வேண்டும்” என்று குர்ஆன் சொல்கின்றது.

இல்லாதவன் பொறுமையைக் கடைப்பிடிப்பதும், இருப்பவன் இரக்கம் காட்டுவதும் சுவனம் செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும். எனவே பணம் படைத்தவர்கள் இதயத்தில் இரக்கம் பிறக்க வேண்டும். அந்த இரக்கம் சமூகத்தில் உறக்கம் களைத்து உயர்வைத் தர வேண்டும்.

ஹஜ் செய்யும் ஹாஜிகளிடம் ஹஜ் என்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படும் இயல்பை வளர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமல் வெறுமனே சென்றோம்-வந்தோமென்று இருந்தால் அந்த ஹஜ்ஜின் நிலை குறித்தே சிந்திக்க வேண்டியதாகி விடும்.

எனவே இந்த ஹஜ், ஹாஜிகளிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தின் உயர்வுக்கு அடித்தளமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போமாக!

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)

"...ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்...." [Quran 4:34]

அழகிய வரவேற்பு
  • வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
  • மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.
  • வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
  • நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
  • உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
  • தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
  • மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
  • மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
  • நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.
விளையாட்டும் கவன ஈர்ப்பும்
  • நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
  • ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
  • இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
  • இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுது போக்கு” விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
  • வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
  • கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
இனியவளின் ஆலோசனை
  • குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.
  • அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
  • மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
  • மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
  • ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரைக் காணச் செல்லும்பொழுது
  • மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).
  • அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
  • அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
  • மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
  • உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
  • நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
  • குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.
  • நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
  • முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
  • திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
  • எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
  • பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி
  • கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).
  • அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
அழகும் நறுமணமும்
  • நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
  • எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
  • அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
  • மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).
  • பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.
  • இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).
  • காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
  • அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
  • அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
  • மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).
  • பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
  • மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
  • அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
  • படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.
இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
  • தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.
  • உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
  • காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.
  • இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
  • ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
  • மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.
  • அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
  • உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
  • அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
  • பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
  • உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :
  • இஸ்லாத்தின் அடிப்படை
  • அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
  • படித்தல் மற்றும் எழுதுதல்
  • இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
  • பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
  • வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
மேன்மையான அக்கறை
  • வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
  • மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).
  • அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது. (உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்).
  • அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)
  • நீங்கள் அருகில் இல்லாததால், தொலைப்பேசிக்கு பதில் அளித்ததற்காக கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)
பொறுமையும் சாந்தமும்
  • மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன).  அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.
  • இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும்.  (உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை).
  • உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
தவறுகளைத் திருத்துதல்
  • முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.
  • அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
  • அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).
  • மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
  • குர்ஆனில் (4-வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.
  • காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.
  • செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.
மன்னிப்பும் கண்டிப்பும்
  • பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.
  • உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.
  • தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).
  • எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).
  • சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
  • தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
  • அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
  • பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.
  • மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.
(உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!)

The above article is a summary of the book “How to make your wife happy” by Sheikh Mohammed Abdul Haleem Hamed. English Translator brother Abu Talhah, reviewer Brother Adam Qurashi of Muslim Students’ Association University of Alberta Edmonton, Canada. Tamil Translator (from English) : Mufti, Jeddah, K.S.A.

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? டாக்டர் பெரியார்தாசன்

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.

நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்
ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.

நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.

ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டாக்டரின் சொற்பொழிவை விரைவில் பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).


பாரதிராஜா என் ரசிகர்! வைரமுத்து என் மாணவர்! அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்து சொல்வேன்

ரமழான் புண்ணியங்களின் பூக்காலம்

بسم الله الرحمن الرحيم

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான்.

ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு
முறைகளை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

நோன்பு இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (2:183)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்ப்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
யார் நோன்பு என்ற இந்த கடமையை மறுக்கின்றாரோ அவர் காஃபிராகி
விடுவார்.இஸ்லாமிய ஆட்சியில் திருந்தி பாவமன்னிப்பு தேடுமாறு கூறவேண்டும்.

அவ்வாறு செய்யவில்லையெனில் நம்பிக்கை கொண்ட பின் (முர்தத்)இஸ்லாத்தை விட்டு விலகிச்சென்றவன் என்ற அடிப்படையில் அவனைக்கொன்றிட வேண்டும். பிறகு அவனை குளிப்பாட்டவோ,கஃபனிடவோ,ஜனாஸா தொழுகை நடத்தவோ,
முஸ்லீம்களின் கப்றுஸ்தானத்தில் அடக்கம் செய்யவோ கூடாது.

  • ரமழான் மாத நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.
  •  நபி(ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.

ரமழான் மாதத்தின் சிறப்புகள்
  • மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கின்ற அல்குர்ஆன் அருளப்பட்டமாதம். (2:185)
  • ரமழான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும் அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும். அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் 'நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக்கொள்ளுங்கள்!' என்று உரக்கச்சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : திர்மிதி, இப்னுமாஜா)

  • ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத்)

  • ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத்தவிர என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : முஸ்லிம்)

  • யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

  • யார் (உறுதியான)நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் (இரவில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

  • எவர் ரமழானில் உம்ரா செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜைநிறைவேற்றியவர் போன்றாவார். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

  • ரமழான் மாதத்தில் லைலத்துல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.

நோன்பின் சிறப்புகள்

  • நோன்பின் பரிந்துரை : நோன்பும், அல்குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும், நோன்பு கூறும் என் இறைவா! நான் இந்த அடியானை உணவை விட்டும் மனஇச்சையை நிறைவேற்றுவதை விட்டும் தடுத்துவைத்திருந்தேன்! எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக! குர்ஆன் சொல்லும் : நான் இவனை இரவில் தூங்க விடாமல் தடுத்திருந்தேன். எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக! இவ்வாறு இவ்விரண்டும் சிபாரிசு செய்யும். (ஆதாரம் : அஹ்மத்,தபரானி,ஹாகிம்)
  • நோன்பு ஒரு கேடயமாகும். அதனைக்கொண்டு மனிதன் நரகத்திலிந்து தன்னைத்தற்காத்துக் கொள்கிறான்.(ஆதாரம் : அஹ்மத்)

  • சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு 'அர்ரய்யான்'; என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத்தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

  • நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும்பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
  • எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்ப்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை எழுபது ஆண்டு தொலைவுக்கு தூரப்படுத்துவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புகாரி,முஸ்லிம்)

ரமழான் நோன்பு எப்போது ஆரம்பம்?

பிறை பார்த்து நோன்பை ஆரம்பிக்கலாம். அல்லது உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பிறை பார்கப்பட்டதாக உறுதியான தகவல் ஒரு நபரின் மூலம் கிடைத்தாலும் ரமழான் நோன்பின் வருகையை உறுதி செய்யலாம். பிறைபார்க்க முடியாமல் மேக மூட்டமாக இருந்தால் ஷஅபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து ரமழானின் நோன்பை நோற்கலாம். இம்மூன்று வழி முறைக்கும் குர்ஆன் சுன்னாவில் தெளிவான, உறுதிமிக்க ஆதாரங்கள் உண்டு.

ஆனால் சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்க்கக்கூடாது. ரமழான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்க்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்ப்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

ரமழான் நோன்பு கடமையானவர்கள்

  • காஃபிர்கள், வேண்டுமென்றே தொழுகையை விட்டவர்கள் மீது நோன்பு கடமையாகாது. தொழுகையை யார் விட்டானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம் : அஹ்மத்)
  • பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்க்குமாறு ஏவலாம். ஸலஃபுகளிடத்தில் இதற்கு நல்ல முன்னுதாரணங்கள் உண்டு.
  • பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்பிற்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
  • முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
  • சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால், அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
  • பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின், விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
  • கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்ப்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டிய அவசியமில்லை. விடுபட்ட நோன்பிற்காக ஒரு நோன்பிற்கு ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.
  • மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்க்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
  • நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற  ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பின்பு அந்த நோன்பை நோறக்க வேண்டும்.
  • நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு பதிலாக அவருடைய பொறுப்பாளர் (வாரிசோ, உறவினரோ)நோன்பு நோற்க்க வேண்டும்.
  • பொறுப்பாளர் யாரும் இல்லையெனில் அல்லது பொறுப்பாளர் நோன்பு நோற்க்க விரும்பவில்லையெனில் மரணித்தவருக்கு எத்தனை நோன்புகள் கடமையாக இருந்ததோ அத்தனை நோன்புகளுக்கும் ஒரு நாளைக்கு ஒரு ஏழை வீதம் உணவு வழங்க வேண்டும்.

நோன்பை முறிக்கும் செயல்கள்

  • சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும்.
  • முத்தமிடுதல், அணைத்தல்,உடலுறவு, சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
  • உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
  • மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும். வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய பரிகாரம்
  • வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய குற்ற பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க்க வேண்டும். அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்) நோன்பாளிகளின் கவனத்திற்கு...
  • நாம் செய்யும் எல்லா இபாதத்துகளுக்கும் நிய்யத் அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் ஃபஜ்ருக்கு முன் நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்க வேண்டும்.(நிய்யத் என்பது வாயால் மொழிவதல்ல மனதால் எண்ணுவது)
  • பல்துலக்குவது, சிறு காயங்கள், விபத்துக்கள் மூலம் ரத்தம் குறைவாகவோ, அதிகமாகவோ வெளியாகுதல், வாந்தி எடுத்தல் போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
  • இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பிற்கு மருந்து செலுத்துதல், கண் காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குள் சென்று விடாத வகையில் உணவை ருசிபார்த்தல், போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
  • மறதியாக உண்பதினாலோ பருகுவதினாலோ நோன்பு முறிந்து விடாது.
  • நகம், முடிவெட்டுதல், நோன்பின் பகல் வேளையில் குளித்தல், சுரும்மா இடுதல், வாசனை திரவியங்கள் பூசுதல் போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
  • எல்லை தாண்டாத அளவிற்கு சுய கட்டுபாடு உள்ளவர் மனைவியை அணைப்பதும், முத்தமிடுவதும் கூடும்.
  • குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோறக்கலாம் ஆனால் ஃபஜ்ரு தொழுகைக்கு குளிப்பது கட்டாயம்.
ரமழான் மாதத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்

  • தொழுகை இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை. இக்கடமையை உரிய நேரத்தில் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
  • நோன்பு நோற்பவர்கள் ஸஹர் உணவு உண்பதும், அதை பிற்படுத்துவதும், இஃப்தாரை முற்படுத்துவதும் இவ்விரண்டு உணவு வேளைகளில் பேரீத்தம் பழம் உண்பதும் விரும்பத்தக்க ஒழுங்கு முறைகளில் உள்ளதாகும்.
  • யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : திர்மிதி) இதுவும் ரமழானில் நமக்கு நன்மையை பெற்றுத்தரும் நற்செயலாகும்.
  • சுன்னத், நஃபிலான வணக்க வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • பாவங்களிலிருந்து விலகி இருப்பதுடன் நம்முடைய குணத்தை சீராக்கி இறையச்சத்தை அதிகரிக்க வேண்டும்.
  • ரமழான் மாதம் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் எனவே குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்க முயற்சிப்பது, ஆயத்துகள் அல்லது சூராக்களை மனனம் செய்வது, குர்ஆன் ஓதத்தெரியாதவர்கள் நன்றாக ஓதத்தெரிந்தவர்களிடம் ஓதக்கற்றுக்கொள்வது, திருக்குர்ஆனின் பொருளை உணர்ந்து சிந்திப்பதுடன் அதன் விளக்கங்களை தெரிய முயற்சிப்பது, குர்ஆன், சுன்னாவை நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறை படுத்த பயிற்சி எடுத்துக்கொள்வது. இதுபோன்ற நல்ல அமல்களில் ஈடுபடவேண்டும்.
  • மூவருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அம்மூவரில் ஒருவர் நோன்பாளி எனவே ரமழானில் தினமும் அதிகமாக துஆச்செய்ய வேண்டும். இந்த துஆக்கள் குறிப்பாக ஸஹருடைய நேரத்திலும், இஃப்தாருடைய நேரத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இருத்தல் வேண்டும். நாம் செய்யும் துஆக்களின் வாசகங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடம் பெற்றவையாக இருந்தால் மிகச் சிறந்தது.
  • இம்மாதத்தில் நபி(ஸல்) வேகமாக வீசுகின்ற புயல் காற்றை விட அதிகம் தர்மம் செய்திருக்கின்றார்கள். எனவே நாம் அண்டை, அயலார்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், மதரஸாக்கள், கல்வி ஸ்தாபனங்கள், அழைப்புப்பணி மையங்கள் என நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும்.
  • முஸ்லீம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய சட்ட திட்டங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக கொள்கை(அகீதா) விஷயத்தில் பலஹீனமாக இருக்கின்றனர். எனவே குர்ஆன் ஹதீஸின் கருத்துக்களை ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் புரிதல் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதற்கும், அவர்கள் ஆற்றிய உரைகளை கேட்பதற்கும் இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • இஸ்லாமிய இணைய தளங்களை பார்த்து பயனுள்ள தகவல்களை சேகரித்து கௌ;வதுடன் மின் அஞ்சல் வழியாக நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளவேண்டும்.
  • இஃப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து மாற்று மத நண்பர்களை அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு இரவை அடைய முயற்ச்சிப்பது.

  • மரணத்திற்கு பின் உள்ள வாழக்கைக்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வோம்
.
ரமழான் மாதத்தில் அவசியம் தவிர்க்க வேண்டிய தீய பழக்கங்கள்
  • இறந்து போன அவ்லியாக்களை அழைத்து பிரார்த்தனை செய்வது, உதவிதேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அறுத்து பலியிடுவது, அவர்களின் கப்ருகளை தவாஃப், ஸஜ்தா செய்வது இதுபோன்ற இணைவப்பான காரியங்களின் மூலம் நோன்பு உட்பட நாம் செய்யும் அனைத்து நல்லறங்களும் அழிந்து விடும். பார்க்க அல் குர்ஆன் 39 : 65,6:88
  • ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமழான் மாதம் பத்ரு போர் நடை பெற்றது. இதனை காரணமாக வைத்து பத்ரு மவ்லூது என்றொரு மவ்லூதை பாடிவருகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய (பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.
  • பொய், புறம், கோள், கேலி, கிண்டல், கோபம், வீண் விவாதங்கள், அசிங்கம், ஆபாசம், மோசடி, நம்பிக்கை துரோகம்... போன்ற அனைத்து தீய பண்புகளிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும். யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி)
  • புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.உங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்!. (2:195), உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம்.(4:29) நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் : நமக்கும் நாம் தீங்களிக்கக் கூடாது பிறருக்கும் தீங்களிக்கக் கூடாது.(ஆதாரம் : இப்னு மாஜா, ஹாக்கிம்)
  • சினிமா, இசை, பாடல்கள், நாடகங்கள், போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். பார்க்க அல் குர்ஆன் (31:6) நபி(ஸல்) கூறினார்கள் : இந்த சமுதாயத்தில் பூமியினுள் புதையுண்டு போவதும், கல்மாரி பொழிவதும், உருமாற்றமும் ஏற்படும் இது அவர்கள் மது அருந்துவதினால், பாடகிகளை வைத்து பாடல்களை கேட்டால், இசை கருவிகளை உபயோகிப்பதால் அவ்வாறு நிகழும் (ஆதாரம் : திர்மிதி) இப்னு ஹஸ்ம்(ரஹ்)கூறுகிறார் : அன்னியப்பெண்ணின் குரலை கேட்டு ரசிப்பது முஸ்லீம்கள் அனைவர் மீதும் ஹராமாகும்.
  • அதிகமான நேரங்களில் தூங்கியும், கேரம்போர்டு, செஸ், லுடோ இதுபோன்ற சதுரங்க விளையாட்டுக்களை விiளையாடியும், கேளிக்கைகளில் ஈடுபட்டும் நேரங்களை வீணடிக்கவேண்டாம்.
குற்றவாளிகளைக் குறித்து- உங்களை ஸகர்(நரகத்தில்)நுழைய வைத்தது
எது?(என்றுகேட்பார்கள்.)...(வீணானவற்றில்)மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம் எனக் கூறுவர்:(74 : 41,45)
நபி(ஸல்)கூறினார்கள் எவனொருவன்(சதுரங்கம்)செஸ் விளையாடுகிறானோ அவன் தனது கையை பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் நனைத்தவனைப்போலாவான் (ஆதாரம் : முஸ்லிம்)

இது போன்ற அனைத்து தீய பழக்கங்களை விட்டும் ரமழானிலும் அல்லாத
நாட்களிலும் நம்மை பாதுகாதுகாத்துக்கொள்வோம்.

இறுதி பத்து நாட்கள், லைலத்துல் கத்ரு, இஃதிகாஃபின் சிறப்புகள்

(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம்
விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக
எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம் நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.(43 : 3,4)
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற
இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு
அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக
மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:1-5)

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ரு (இரவில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி) இந்த நபி
மொழியிலிருந்து பெண்களும் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

ரமழானின் இறுதி பத்து நாட்களின் சிறப்பு குறித்து ஏராளமான நபி மொழிகள் வந்துள்ளன.

மேலே கூறப்பட்டுள்ள நபி மொழிகளிலிருந்து ரமழானின் இறுதி பத்து நாட்களின் சிறப்பை உணர முடிகிறது. ஒரு மனிதன் லைலத்துல் கத்ரு இரவை அடைந்து விட்டால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்கு கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது.


லைலத்துல் கத்ரு இரவு எப்போது?

ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)இந்நபி மொழியிலிருந்து நோன்பு 21,23,25,27,29 ஆகிய தினங்களில் ஏதேனுமொன்றில் லைலத்துல் கத்ரு இரவை அடைந்து கொள்ளலாம் என்பதை அறியமுடிகிறது. ஆனால் முஸ்லீம்களில் பெரும்பாலோர் 27 ஆம் இரவுதான் லைலத்துல் கத்ரு என்று எண்ணி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை காணலாம். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய (பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.
ஒற்றைப்படையான இரவுகளில் ஓதவேண்டிய துஆ

أللهم أنك عفو تحب العفو فاعف عني

தமிழில் : அல்லாஹும்ம இன்னக்க அஃகப்வுன் துஹிப்புல் அஃகப் வ ஃகபஉஃகபு அன்னீ.
பொருள் : இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை
விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (ஆதாரம் : திர்மிதி)

ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம்

நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஜகாத்துல்ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)

யாரின் மீது கடமை?

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், குழந்தைகள், அடிமை,
சுதந்திரமானவர் என அனைவர் மீதும் ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம் கடமை. உஸ்மான்(ரலி) அவர்கள் வயிற்றிலுள்ள சிசுவிர்க்காகவும் இத்தர்மத்தை வழங்கி இருக்கின்றார்கள். பேணுதல் அடிப்படையில் இவ்வாறு வழங்குவது குற்றமாகாது.

எவற்றை தர்மமாக வழங்க வேண்டும்?

நாம் எந்த உணவை உண்போமோ அதுபோன்ற உணவு தானியங்களைத்தான்
தர்மமாக வழங்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள்
போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்...(2:267)

மேலும் ஆடையாகவோ, பாத்திரங்களாகவோ, வேறு பொருட்களாகவோ, பணமாகவோ வழங்குவது கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் உணவு தானியமாகத்தான் வழங்க கட்டளையிட்டுள்ளார்கள்.  நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)கூறினார்கள். நூல் : முஸ்லிம்.

ஜகாத்துல்ஃபித்ரின் அளவும், அது வழங்கப்படும் நேரமும், அத்தர்மத்தை
பெறத்தகுதியானவர்களும் ஜகாத்துல்ஃபித்ரின் அளவு 2கிலோ 500 கிராம் உணவு தானியமாகும்.

நோன்புப் பெருநாள் இரவிலிருந்து மறுநாள் காலை மக்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும்.

பெருநாள் அன்று காலையில் நிறைவேற்றுவது சிறந்ததுமாகும். அல்லது
பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதற்க்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால் பெருநாள் தொழுகைக்குப் பிறகு இக்கடமையை நிறைவேற்றினால் ஏனைய தர்மங்களில் ஒரு தர்மமாகவே கருதப்படும். ஜகாத்துல்ஃபித்ர் தர்மம் பெற்றிட தகுதியானவர்கள் ஏழைகளும், நிறைவேற்ற முடியாத கடன் சுமை உள்ளவர்களும் ஆவார்கள். இத்தர்மத்தை ஒன்றுக்கதிகமான ஏழைகளுக்கும் வழங்கலாம். அல்லது பலருடைய தர்மங்களை ஒரே ஏழைக்கும் வழங்கலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்) யா அல்லாஹ்! எங்களது தீன் பற்றிய அறிவு ஞானத்தையும் அதன்படி அமல் செய்யும் பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக! இறை விசுவாசிகளாகவே எங்களை மரணிக்கச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களை சேர்ப்பாயாக! கருணை மிக்க இறைவனே! உனது கருணையினால் எங்களுக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் பாவமன்னிப்பு வழங்குவாயாக!

இக்கட்டுரை தொகுக்க உதவிய நூல்கள் :

ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்(ரஹ்) அவர்கள் எழுதிய மஜாலிஸ் ஷஹ்ரு ரமழான், ஃபதாவா அஹ்காமுஸ்ஸியாம்.
உஸைமீன்(ரஹ்) அவர்களின் மாணவர் ஷைக் ஃபவ்ஸி இப்னுஅப்துல்லா அவர்கள் எழுதிய அத்துர்ரத்துல் முஅத்தரா ஃபீ அஹ்காமிஸ்ஸியாம் ஃபீ ஷரீஅத்தில் முதஹ்ஹரா.


தொகுப்பு : மௌலவி ள.யாஸிர் ஃபிர்தவ்ஸி