இயேசுவின் சிலுவை மரணம் – பைபிளின் முரண்பட்ட நிலை

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)


உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு ( இயேசு அரபில் ஈஸா, கீப்ருவில் ஈசோ என்ரு அழைக்கப்படுகிறார்) பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது கீப்ருவில்.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் அகற்றுமாறு இயேசு கடவுளிடம் மன்றாடுவதாக பைபிள் கூறுகிறது. தன்னை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்ற பிரார்த்திக்குமாறு தன் சீடர்களிடமும் வேண்டிக் கொள்கிறார். இந்த பிரார்த்தனையை கடவுள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?
பைபிளின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். (யோவான் 9:31)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் அல்லவா? இல்லை என்றால் இயேசு தெய்வ பக்தியுள்ளவராக இருந்து, தெய்வத்தின் சித்தத்தைச் செய்தவராக இருந்தும் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?

பைபிள் குறிப்பிடும் இன்னுமொரு சம்பவம்:
இறந்து கிடந்த லாசர் என்பவரின் சகோதரி மார்த்தாள் என்ற பெண் இயேசுவிடம் கூறினாள்,

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, நீர் இங்கு இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (யோவான் 11: 21,22)

கடவுளிடம் நீர் எதைக் கேட்டாலும் உனக்குத் தருவார் என்று இயேசுவைப் பற்றி நன்கறிந்த அப்பெண் கூறுகிறாள். இயேசுவும் அதனை மறுக்கவில்லை. அப்படியெனில் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு இயேசு மனமுருகி வேண்டிய போது அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் இருந்திருக்குமா?

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7)

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து, என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26: 39)

மேற்கண்ட எபிரேயர் 5:7 வசனம் இயேசுவின் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை அவரிலிருந்து அகற்ற வேண்டும் என்ற வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்ற செய்தியை அல்லவா கூறுகிறது? இல்லை என்று இதனை யாரேனும் மறுப்பார்களானால்  

“பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்..”

என்ற யோவான் 9:31 வசனத்தின் படி இயேசுவைப் பாவி என்று கூற வேண்டிய அபத்தமான நிலைக்கு தள்ளப்படுவர். அத்துடன் தேவ ஆவியானவரின் உந்துதலால் எழுதப்பட்டது என்று வாதிக்கப் படும் பைபிளின் வசனங்களையும் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இயேசுவின் பிரார்த்தனையை ஊன்றிக் கவனிக்கும் எவருக்கும் அவர் மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றவே அவ்வாறு காப்பாற்ற சக்தியுடைய கடவுளிடம் பிரார்த்தித்தார் என்பது புலப்படும். பயபக்தியுடன் கேட்ட அவரது வேண்டுதல் ஏற்றுக் கொள்ளவும் பட்டது. சிலுவை மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பைபிளின் கூற்றுப் படி இவ்வாறே கருத இடமுண்டு. திரித்துவக் கொள்கைப் படி பிதாவின் விருப்பமும் புத்திரனின் விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு இல்லை எனில் திரித்துவக் கொள்கையின் அடிப்படைக்கு இது முரணாக அமைகிறது.

கிறித்தவர்கள் இயேசு என்று குறிப்பிடும் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் ஒரு மனிதராக இருந்தார். இஸ்ராயீல் சமூகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு நபியாக இருந்தார். அவரைக் குறித்து குர்ஆன் குறிப்பிடும் போது இப்னு மர்யம் (மர்யமின் மகன்) என்று குறிப்பிடுகிறது. அவர் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாகக் கிறித்தவர்கள் நம்புகின்றனர். அது வெறும் யூகம் மட்டுமே என்று குர்ஆன் கூறுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாக பைபிள் குறிப்பிட்டாலும் அநேக இடங்களில் அதற்கு முரணான தகவலையும் தருகிறது. இத்தகைய முரண்பாடுகள் குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்துவதுடன் அகிலங்களின் இறைவனால் அருளப்பட்ட இறைவேதத்தின் உறுதித் தன்மையைப் பறைசாற்றுகிறது.

மேலும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரான மர்யமின் மகன் ‘ஈஸா மஸீஹை’ கொன்று விட்டோம்’ என்று அவர்கள் கூறியதாலும் (சபிக்கப்பட்டனர்.) மேலும், அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆயினும், அவர்களுக்கு, அவர் (போன்று ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான். மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுள்ள வனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 157, 158)

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.



1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!
திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.

(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)

2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!
ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது ‘வலீ’ எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.

பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் ‘வலீ’ எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.

3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!
உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?

உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.

சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ‘மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.

திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.

சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.

எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!
திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட ‘நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!’ என்று கூறி விடுகின்றனர்.
‘பார்க்க வேண்டும்!’ என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், ‘நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!’ என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.

5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!
உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!

6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!
வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.

ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை ‘சீதனம் வேண்டாம்!’ என்று கூறினாலும் ‘மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!’ என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட ‘தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?’ எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.

எனவே, மணப் பெண்களே!
உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!

7. அறிந்துகொள்ளுங்கள்!
திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!

திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், ‘ஃபேஸ்புக்’ தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.

எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!