இறைவன் ஒருவனே எனும் போது மனிதர்கள் அனைவரும் அவனது படைப்புகளே என்பதும் தெளிவாகின்றது. உலகில் ஏதாவதொரு பாகத்தில் இஸ்லாமிய ஆட்சி அமைய வாய்ப்பு இருந்தாலும் பூகோள அடிப்படையில் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமே மனித உரிமைகள், மாண்புகள் பேணப்பட வேண்டும் என இஸ்லாம் வரையறுக்கவில்லை. இஸ்லாம் அளித்திருக்கும் உரிமைகள் உலகலாவியவை. மனிதகுலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியவை. அந்த உரிமைகள்-ஒரு இஸ்லாமிய அரசுக்குட்பட்ட எல்லையில் வாழ்ந்தாலும் சரி, அதற்கு வெளியே வாழ்ந்தாலும் சரி, போரிட்டாலும் சரி, எந்த நிலைமையானாலும் கடைபிடிக்க வேண்டியவையே!
குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது :
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. (5:8)
மனித இரத்தம் புனிதமானது. எந்நிலையிலும் அதனை அநியாயமாக சிந்தக் கூடாது. இந்தச் சட்டத்தை மீறி ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்பவர் மனிதகுலம் முழுவதையும் கொலை செய்தவரைப் போன்றவராவார்.
குர்ஆன் கூறுகிறது :
பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே கொன்றவர் போன்றவராவார். (5:32)
பெண்கள், மழலைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், காயமடைந்தோர் ஆகியோரைக் கொடுமைப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எல்லா சூழலிலும் பெண்களின் கற்பும், கண்ணியமும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் வறியவர்கள், காயமடைந்தோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
இஸ்லாத்தில் பேசப்படுகிற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட உரிமைகளாகும். அவை ஏதோ ஒரு அரசாலோ, சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல. மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம். சர்வாதிகாரிகளின் அரசாணையும் இவ்வாறு மாற்றப்படக் கூடியதே! அவர்களுக்கு ஒத்து வரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கி விடுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் சட்ட மன்றத்திற்கும், அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றைத் திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ அதிகாரமில்லை.
வெற்றுத் தாளில் எழுதி வீண் விளம்பரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்ற உதவாக்கரை ஆவணங்களல்ல அவை. வெளிச்சம் போட்டுக் காட்டிய பின் நடைமுறை வாழ்வில் அமல்படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை. உருப்படாத தத்துவங்கள் அல்ல அவை. அமுல்படுத்துவதற்கு இசைவான இல்லாத வறட்டுக் கொள்கைகள் அல்ல அவை.
ஐக்கிய நாட்டுப் பேரவை அதனுடைய பிரகடனம், அது எடுத்த தீர்மானம், வழங்கிய மனித உரிமைகள் இறைவன் அருளிய மனித உரிமைகளோடு ஒப்பிடக் கூடியவை அல்ல. ஏனெனில் இறைவன் வழங்கிய மனித உரிமைகள் இஸ்லாமிய நம்பிக்கையின் பிரிக்க முடியா அங்கமாகும். ஒவ்வொரு முஸ்லிமும், தன்னை முஸ்லிம் என வாதிடும் ஆட்சியாளனும் இவற்றைக் கண்டிப்பாக ஒப்புக் கொண்டு அங்கீகரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இறைவன் வழங்கிய இவ்வுரிமைகளை மாற்றினாலோ, திருத்தினாலோ, மறுத்தாலோ, வெறும் வாய் வேதாங்களைப் பேசினாலோ, அமுல்படுத்தத் தவறினாலோ குர்ஆன் எச்சரிப்பதைப் பாருங்கள் :
எவர்கள் அல்லாஹ் அருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள் தாம் நிராகரிப்பாளர்கள். (5:44)
இஸ்லாமிய அரசில் மனித உரிமைகள்
உயிர் மற்றும் உடமைப் பாதுகாப்பு :
இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரைப் பறிக்கக் கூடாது.
முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.
மனித மாண்பின் பாதுகாப்பு :
குர்ஆன் கூறுகிறது :
ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்யாதீர்கள்
அவதூறு கற்பிக்காதீர்
பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்
புறங்கூறாதீர், தரக் குறைவாகப் பேசாதீர்
தனிநபர் வாழ்வும் புனிதமும் :
உளவு பார்க்காதீர்
உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழையாதீர்
தனிநபர் சுதந்திரம் :
எந்தவொரு மனிதனின் குற்றமும் பகிரங்கமாக நீதிமன்றத்தில் நிரூபணமாகாத வரை, அவரை சிறையிலடைக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவரை சிறையிலடைக்கக் கூடாது. நீதிமன்றத்தில் ஒருவரைப் பாதுகாத்துக் கொள்ள வாய்பளிக்காமல் சிறையிலடைக்க இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை.
கொடுங்கோண்மைக்கு எதிராக பாதுகாப்பு :
இஸ்லாம் வழங்கிய மனித உரிமைகளில் ஒன்று அரசுக் கொடுங்கோண்மைக்கெதிரான பாதுகாப்பாகும்.
குர்ஆன் கூறுகிறது :
தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை இறைவன் விரும்புவதில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர் பேசலாம். (4:148)
இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை. மனிதனுக்கு வழங்கப்பட்டதெல்லாம் பிரதிநிதிக்குரிய அதிகாரமே! அடைக்கலமாக அளிக்கப்பட்ட அதிகாரமே ஆகும்.
இத்தகைய அதிகாரங்களைப் பெற்றவர், மக்களின் முன் தூய்மையானவராக அப்பழுக்கற்றவராக காட்சியளிக்க வேண்டும். அந்த மக்களின் நன்மையை ஒட்டியே அதிகாரம் பயன்பட வேண்டும்.
இதனை உறுதிப்படுத்தி அபூபக்ர் (ரலி) அவர்கள் பதவியேற்ற பின் தம்முடைய முதல் உரையில் கூறுகிறார் :
நான் நல்லது செய்தால் என்னோடு ஒத்துழையுங்கள் நான் தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள். இறைவனின் - இறைத்தூதரின் ஆணைகளை நான் நிறைவேற்றும் வரை எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் வழிதவறி நடந்தால் எனக்குக் கீழ்ப்படிய வேண்டாம்.
கருத்துச் சுதந்திரம் :
குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு இஸ்லாம் முழு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை, ஒழுக்க மேம்பாட்டிற்கு வாய்மைப் பரவுதலுக்கும் துணையாக அது அமைய வேண்டும். கொடுங்கோண்மை மற்றும் தீங்கு அதிகரிக்கலாகாது.
கருத்துச் சுதந்திரம் பற்றி மேலைநாட்டினர் கொண்டுள்ள கருத்தோட்டத்தை விட இஸ்லாம் அளித்துள்ள கருத்துச் சுதந்திரம் சிறப்பானது. எந்தக் காரணத்தாலும் தீமைகள், அநியாயங்கள் பெருகுவதை இஸ்லாம் அனுமதியளிப்பதில்லை. விமர்சனம் என்ற பெயரில் பழி தாக்குதல், அத்துமீறல்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இறையானை ஏதேனும் உள்ளதா என்று முஸ்லிம்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை விசாரிப்பது வழக்கம். அப்படி இறைக்கட்டளை எதுவும் வெளியாகவில்லை என்று நபிகளார் கூறினால், முஸ்லிம்கள் வெளிப்படையாக மனம் விட்டுத் தத்தமது கருத்துக்களைக் கூறுவார்கள்.
கூடிவாழும் உரிமை :
கட்சி, மன்றங்கள் அமைத்து மனிதர்கள் கூடி வாழும் உரிமை மதிக்கப்பட வேண்டும். இந்த உரிமைகளம் ஒரு சில பொதுநல விதிகளுக்குட்பட்டே இருக்க வேண்டும்.
தீர்மானிக்கும் உரிமை :
இஸ்லாம் கூறுகிறது :
இறைமார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. (2:256)
சர்வாதிகார சமூக அமைப்பில் தனிநபர் உரிமை என்பதே எதுவும் இலலை. அரசிற்கு அளிக்கப்படும் வரையற்ற அதிகாரங்கள், மனித அடிமைத் தனத்தையும், கீழ்மையையம் உண்டாக்கும். ஒரு காலத்தில் மனிதன் மீது முழு அதிகாரம் செலுத்தும் அடிமை முறை அமலில் இருந்தது. இப்பொழுது அத்தகைய அடிமை முறை சட்டபூர்வமாக ஒடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அடிமைத்துவத்திற்குச் சமமான தனிநபர் கட்டுப்பாடுகளை சர்வாதிகார அமைப்பு விதித்துள்ளதை நாம் கண்கூடாகவே பார்க்கலாம்.
சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு :
சுய தீர்மான உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை இஸ்லாம் வலியுறுத்துகிற அதே நேரத்தில் தனிநபரின் உணர்ச்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கவும் தவறவில்லை. சமய விவகாரத்தில் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிக்கும் வகையில் எந்தச் செயலும் கூடாது. எந்தப் பேச்சும் கூடாது என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்பு :
வேரொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது :
ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். (6:164)
வாழ்வாதார அடிப்படைக்காக உரிமை :
தேவையள்ளோருக்கும் வறியோருக்கும், உரிய உரிமைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. அவர்களுக்கு உரிய நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
இறைவன் கட்டளையிடுகிறான் :
அவர்களின் சொத்தில் வறியவர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உரிமையுண்டு. (70:15)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் :
சட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களுக்கும் பரிபூரண முழுமையான உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.
ஆட்சியாளர் விதிவிலக்கல்ல :
ஓர் உயர்ந்த வம்சத்துப் பெண் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாள். அந்த வழக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப்பட்டது. திருட்டுக் குற்றத்திலிருந்து அவளை விடுவிக்க வேண்டும். தண்டிக்கக் கூடாது என்று சிலர் பரிந்துரை செய்தனர். அப்பொழுது முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர், சாமானியர்கள் தவறு செய்தால் தண்டிப்பார்கள். மேட்டுக் குடி மக்கள் அதே தவறைச் செய்தால் தப்பிக்க விடுவார்கள். என் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ, அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மதின் மகள் ஃபாத்திமா இதே தவறைச் செய்தாலும் நான் அவர் கையைத் துண்டிக்காமல் விட மாட்டேன்.
அரசின் விவாகரங்களில் கலந்து கொள்ளும் உரிமை :
அவர்கள் பணிகள் அவர்களுக்குள் கலந்தாலோசனை மூலமாகவே (நடைபெறும்). (42:38)
ஆலோசனை சபை அல்லது சட்டமன்றம் என்பதன் கருத்து இது தான் :
அரசின் தலைவர், மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக, சுயேட்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
சட்டபூர்வ பாதுகாப்பினை நல்கி மேற்கூறிய மனித உரிமைகளைச் சாதிப்பதில் இஸ்லாம் நாட்டும் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, மிருக இயல்புகளை விட்டும் வெளியேறி, மனித மாண்புளை மேற்கொள்ள வேண்டும். இரத்த பந்தம், இன மேன்மை, மொழி வெறி, பொருளாதார மேலுரிமை போன்ற குறுகிய வட்டங்களை விட்டுப் பரந்த நோக்கின் பால் வர வேண்டும். அந்தரங்க சுத்தியோடு சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவி வாழ வேண்டும் என இஸ்லாம் மனித குலத்திற்கு அறைகூவல் விடுத்து அழைக்கிறது!
👍✌️
ReplyDelete